காவல்துறையின் இனவெறித் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் நம்பிக்கை ‘சிதைந்துவிட்டது’ என Montreal நகர முதல்வர் Soraya Martinez Ferrada தெரிவித்தார்.
இரண்டு காவல்துறை அதிகாரிகளின் இனவெறி, பாகுபாடு நிறைந்ததாகக் கூறப்படும் நடத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனவும், இது பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது எனவும் Montreal-North நகர முதலவர் Christine Black கூறுகிறார்.
Montreal-வடக்கு வட்டாரத்தில் பணியாற்றி வந்த இரண்டு Montreal காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் பாகுபாடுடனும் இனவெறியுடனும் நடந்துகொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, Montreal காவல்துறைத் தலைவர் Fady Dagher இந்த பணியிடை நீக்கத்தை அறிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, 39-ஆவது காவல் நிலையத்தைச் சேர்ந்த மேலும் 14 அதிகாரிகள், பொதுமக்களுடன் தொடர்பு இல்லாத பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு அதிகாரிகளும், குற்றவியல் சட்ட மீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், குற்றவியல், தண்டனை வழக்குகள் இயக்குநரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Montreal காவல் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த March மாதம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் இன ரீதியாக பாகுபடுத்தப்பட்ட சமூகங்களிடையே, தூண்டியுள்ள கோபத்தையும் கவலையையும் Montreal நகர முதல்வர் Soraya Martinez Ferrada ஒப்புக் கொண்டார்.
காவல்துறைக்கும் அவர்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கை குறித்து இந்தக் குற்றச்சாட்டுகள் நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளன எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் காவல்துறையினர் தொடர்பான இனவெறிச் சம்பவங்களைப் புகாரளிக்குமாறு குடியிருப்பாளர்களை Soraya Martinez Ferrada வலியுறுத்துகிறார்.
