சொந்த மகளின் மரணம் தொடர்பான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு 37 வயதான ஒரு பெண் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
Scarborough-வில் தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாட இருந்த பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்டது.
இதில் தாய் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது இரண்டாவது பிறந்த நாளுக்கு ஒரு மாதம் குறைவாக இருந்த அந்தக் குழந்தை, செவ்வாய்க்கிழமை (12) காலை Midland – Steeles சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உயிர் அறிகுறிகள் ஏதுமின்றி கண்டெடுக்கப்பட்டது.
மருத்துவமனையில் அந்தக் குழந்தை இறந்துவிட்டதாக புதன்கிழமை (13) காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குழந்தை Oriana Cho என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் Toronto நகரில் கொலை செய்யப்பட்ட எட்டாவது நபர் இவராவார்.
கொலை குற்றசாட்ட எதிர்கொள்ளும் குழந்தையின் தாய், 37 வயதான Si Ting Yang என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக அவர் வியாழக்கிழமை (14) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.
இந்தக் கொலை வீட்டிற்குள்ளேயே நடந்ததாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
சம்பவத்தின் போது வீட்டிற்குள் மற்றொரு குழந்தை இருந்ததாகவும், அந்தக் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல்துறையினர் கூறினர்.
இதன் போது தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும், முதலுதவிப் பிரிவினர் இல்லத்திற்கு சென்ற பின்னர் அவர் வீடு திரும்பினார் எனவும் Toronto காவல்துறையின் Det.-Sgt. Henri Marsman கூறினார்.
இது மிகவும் துயரமான, கடினமான சம்பவம் என Henri Marsman சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க ஆர்வம் இருப்பதை ஏற்றுக் கொண்ட அவர், இந்த கொலைக்கான நோக்கம் குறித்து பேச மறுத்தார்.
அது தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் கூறினார்.
இதுவரை மரணத்திற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
