பாடசாலை வாரியங்களின் மாற்றங்கள் தொடர்பான சட்டம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என Ontario மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (13 ) பாடசாலை வாரிய நிர்வாகம் தொடர்பான “முக்கியமான” சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என கல்வி அமைச்சர் Paul Calandra தெரிவித்துள்ளார்.
“திங்கட்கிழமை ஒரு சட்ட முன்மொழிவை அறிமுகப்படுத்துவேன்,” என வெள்ளிக்கிழமை (10) நடந்த செய்தியாளர் சந்திப்பில் Paul Calandra செய்தியாளர்களிடம் கூறினார்.
பாடசாலை வாரியங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து மக்கள் “கவலையுடன்” இருப்பதை அறிவதாக தெரிவித்த அவர், அவர்களுக்கு ஒரு உறுதியை வழங்க விரும்புவதாகவும் கூறினார்.
எமது கல்வி முறையானது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீது கவனம் செலுத்துவதையும், தரமான கல்வியை வழங்குவதையும் உறுதி செய்வதற்கான அடுத்த கட்டம் திங்கட்கிழமை ஆகும் என அமைச்சர் Paul Calandra கூறினார்.
Ontario மாகாணத்தின் எட்டுப் பாடசாலை வாரியங்கள் தற்போது மாகாணத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களின் கீழ் இயங்கி வருகின்றன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் தங்களது பதவிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை வாரிய நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரவிருப்பதாக Ontario மாகாணம் தெரிவித்துள்ளது.
October மாதம் நடைபெறும் நகர சபைத் தேர்தல்களில் மீண்டும் அறங்காவலர்கள் போட்டியிடுவார்களா என்பது குறித்து முதல்வர் Doug Ford பதில் கூற மறுத்து வருகிறார்.
