மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்த நீதிமன்ற விசாரணையின் இறுதித் தீர்ப்பு வழங்குவது April மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
Markham – Elson சந்திப்புக்கு அருகில் ஒரே குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூவர் மரணமடைந்தனர்.
இவர்கள் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான பரீரன் புவனேந்திரன், முன் இருக்கையில் பயணித்த 52 வயதான ஸ்ரீரதி புவனேந்திரன், பின் இருக்கையில் பயணித்த 23 வயதான நிலுஷ்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
2022-இல் நிகழ்ந்த இந்த விபத்துக்கான நீதித்துறை விசாரணை Newmarket நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
March 2 ஆரம்பித்த இந்த வழக்கு விசாரணை March 9 முடிவடைந்தது.
திங்கட்கிழமை (09) அரச தரப்பு வழக்கறிஞர்கள் தமது இறுதி வாதத்தை முன்வைத்தனர்.
இந்த நீதிமன்ற அமர்வின் போது பெருமளவில் தமிழர்கள் அங்கு நேரடியாக கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை April 17-ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த விபத்தில் Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது குற்றச் சாட்டுகள் பதிவாகின.
