கியூபாவிற்கு உதவிகளை வழங்க கனடா திட்டமிட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
ஆனாலும் அனுப்பும் உதவி பொதியில் என்ன உள்ளடக்கப்படும் என்பதை அவர் கூறவில்லை.
அமெரிக்காவின் எண்ணெய் தடை கியூபாவின் ஏற்கனவே மோசமான மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்கும் நிலையில் அங்கு 30 நாட்களுக்குள் எண்ணெய் தீர்ந்து விடும் அபாயம் தோன்றியுள்ளது.
எரிசக்தி இல்லாமல், விரைவில் கியூபாவில் மனிதாபிமான நெருக்கடி உருவாகக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் கனடாவின் உதவித் திட்ட எண்ணம் குறித்து அனிதா ஆனந்த் திங்கட்கிழமை (23) அறிவித்தார்.
நாங்கள் உதவ ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறோம் என கூறிய அவர், அதன் விபரங்களையும் வழங்க இப்போது தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.
கியூபாவின் நிலைமை, மிகவும் அவசரமான தேவை குறித்து கனடிய நாடாளுமன்ற வெளியுறவு குழுவின் முன் கனடாவுக்கான கியூபாவின் தூதர் செவ்வாய்க்கிழமை (24) சாட்சியமளித்தார்.
“எரிசக்தி இல்லாமல், நம் நாட்டில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் பாதிக்கப்படுகிறது” என தூதர் Rodrigo Malmierca Diaz தனது சாட்சியத்தில் கூறினார்.
உணவு விநியோகம், பொது சுகாதாரம், போக்குவரத்து, கல்வி ஆகியவை எரிபொருளை சார்ந்துள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
கியூப அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளியுறவுக் குழுவின் உறுப்பினர்களால் Rodrigo Malmierca Diaz கடுமையான விசாரணையை எதிர்கொண்டார்.
அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்க முயற்சிகளுக்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பிய கனடாவுக்கான கியூபாவின் தூதர், ஒரு மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை கட்டாயப்படுத்த முயற்சிப்பது அமெரிக்காவின் இந்த எண்ணெய் தடையின் முக்கிய நோக்கம் எனவும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
70 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான தடையின் கீழ் உள்ள கியூபா, January முதல் மேலும் மோசமன நிலையை எதிர்கொள்கிறது.
கியூபாவிற்கு உதவி அனுப்புவதில் கனடா சவால்களை எதிர்கொள்கிறது.
இந்த உதவி அரசாங்கத்தால் திருடப்படாமல் இருப்பதையும், அது தேவைப்படும் கியூப மக்களுக்குச் சென்றடைவதையும் உறுதி செய்வதில் கனடா சவாலை எதிர்கொள்கிறது.
அதே நேரத்தில் அமெரிக்காவுடனான பதட்டங்களை இது மேலும் தூண்டிவிடக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.
கியூபாவிற்கு எரிபொருள் அனுப்பும் எந்த ஒரு நாட்டிற்கும் வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் Donald Trump எச்சரித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
