Mexico-வில் உள்ளதாக பதிவு செய்த கனடியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேற்கு Mexico-வின் Puerto Vallarta அருகே முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது பிரதான போதைப் பொருள் கும்பலின் தலைவர் Nemesio Ruben Oseguera Cervantes இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (22) கொல்லப்பட்டார்.
இதனையடுத்து உடனடியாக Mexico-வின் பல மாநிலங்களில் வன்முறையும் அமைதியின்மையும் பரவியது.
செவ்வாய்க்கிழமை (24) மாலை நிலவரப்படி, Mexicoவில் 61,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் பதிவு செய்திருந்தனர்.
இது ஞாயிற்றுக்கிழமை (22) சுமார் 18,000 ஆக இருந்து திங்கட்கிழமை (23) காலை 26,305 ஆகவும், செவ்வாய்க்கிழமை காலை 55,000 ஆகவும் அதிகரித்தது.
இந்தப் பதிவு தன்னார்வமானது என்பதால், Mexico-வில் உள்ள கனடியர்களின் பொதுவான மதிப்பீட்டை மட்டுமே இந்த எண்ணிக்கை குறிக்கிறது என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குளிர்கால மாதங்களில், 100,000 முதல் 200,000 வரை கனடியர்கள் Mexico-வில் இருப்பார்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.
வன்முறை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த அநேக விமான சேவைகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்ற கனடியர்கள் அரசாங்கத்தினால் வலியுறுத்தப்படுகின்றனர்.
கனடியர்கள் Mexico-விற்கு பயணம் செய்யும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா எனற கேள்விக்கு பதிலளிக்க கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
