இலங்கையரான ஒரு சர்வதேச மாணவருக்கு கனடாவில் குறைந்தபட்சம் 25 ஆண்டுக்கான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குறைந்தது 25 ஆண்டுகளுக்கு நிபந்தனை விடுதலை பெற வாய்ப்பில்லாத வகையில் இந்த தண்டனை வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
Ottawa நீதிமன்றத்தில் Febrio De-Zoysa என்ற குற்றவாளி நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுகள், இரண்டு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு ஆகியவற்றில் வியாழன் காலை குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முதலில் அவருக்கு எதிராக ஆறு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த ஆண்டு Ottawa-வின் புறநகர்ப் பகுதியில் உள்ள வீட்டில் ஒரு தாய், அவரது நான்கு குழந்தைகள், ஒரு குடும்ப நண்பரைக் கொன்றதாகக் குற்றத்தை Febrio De-Zoysa ஒப்புக்கொண்ட பின்னர் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
Barrhaven நகரில் ஒரு வீட்டில் இருந்து 6 பேரின் சடலங்கள் கடந்த வருடம் March மாதம் 6 -ஆம் திகதி பின்னிரவு காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயதான தர்ஷனி பன்பரநாயக்க கம வல்வே தர்ஷனி திலந்திகா ஏகன்யகே – Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake, ஏழு வயது இனுகா விக்கிரமசிங்க – Inuka Wickramasinghe, நான்கு வயது அஷ்வினி விக்கிரமசிங்க – Ashwini Wickramasinghe, இரண்டு வயது ரினியானா விக்கிரமசிங்க – Rinyana Wickramasinghe, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்கவும் Kelly Wickramasinghe, குடும்ப நண்பரான 40 வயதான ஜீ காமினி அமரகோன் – Ge Gamini Amarakoon – என காவல்துறையினரால் அடையாளங்கள் வெளியிடப்பட்டது.
உயிரிழந்த குடும்பத்தின் தந்தை – கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க – Dhanushka Wickramasinghe, உயிர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
Ottawa நகர வரலாற்றின் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாக இதை அடையாளப்படுத்திய நீதிபதி Kevin Phillips, குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 வயது Febrio De-Zoysa கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் இலங்கைப் பிரஜை எனவும் , அவர் ஒரு மாணவராக கனடாவில் தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது.
‘இதிலிருந்து மீள முடியவில்லை’ என பாதிக்கப்பட்டவரின் தாக்க அறிக்கையின் போது தனுஷ்க விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் கூறினார்.
தான் செய்த தீங்கிற்கு மிகவும் மனம் வருந்துவதாக தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் Febrio De-Zoysa நீதிமன்றில் தெரிவித்தார்.
