கனடிய பிரதமர், சீன ஜனாதிபதியை வெள்ளிக்கிழமை (31) சந்திக்கின்றார்.
இந்த வாரம் ஆசிய-Pacific பொருளாதார ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் தென் கொரியாவில் சந்திக்கின்றனர்.
இதில் பிரதமர் Mark Carney, சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோரும் அடங்குகின்றனர்.
இவர்கள் இருவரும் வெள்ளியன்று சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்யும் வகையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
முன்னாள் பிரதமர் Justin Trudeau பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த குற்றசாட்டுகள் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திய பின்னர் பின்னடைய சந்தித்த, கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்த சந்திப்பு அமையும் சாத்தியக்கூறு உள்ளது.
வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா கனடாவை ஓரங்கட்டி உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
ஏழு ஆண்டுகளில் கனடாவும் சீனாவும் தங்கள் உயர்மட்டத் தலைவர்களிடையே நேரடி கலந்துரையாடல்களை நடத்துவது இதுவே முதல் முறையாகும் என மூத்த கனடிய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனாலும் இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே ஏதேனும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்புகளை Mark Carney நிராகரித்தார்.
சீனா, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடும், கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்குதாரரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு 2018-ஆம் ஆண்டு மோசமடைந்தது.
வங்கி மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்கா சார்பாக Huawei நிர்வாகி Meng Wanzhou -வை கனடா கைது செய்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
சில நாட்களுக்குப் பின்னர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடாவைச் சேர்ந்த Michael Kovrig, Michael Spavor சீனாவில் கைது செய்யப்பட்டனர்.
Meng Wanzhou வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 1,000 நாட்களுக்கும் மேலாக சீன சிறையில் அடைக்கப்பட்ட கனடியர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனாலும் பிரதமராக பதவியேற்றத்திலிருந்து சீனாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை Mark Carney முன்னெடுத்துள்ளார்.
கடந்த மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது, சீனப் பிரதமர் Li Qiang-கை கனடிய பிரதமர் சந்தித்தார்.
வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த மாத ஆரம்பத்தில் சீனாவில் அதிகாரிகளை சந்தித்திருந்தார்.
