“A Walk to Make Roads Safer” வீதிப் பாதுகாப்புக்கான நடை பயணம் Markham நகரில் Drive Safe For You என்ற விழிப்புணர்வு அமைப்பினால் கடந்த வார விடுமுறையில் முன்னெடுக்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு, பொறுப்பான வாகனம் ஓட்டுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த 4 KM நடை பயணத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி Markham நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் மரணமடைந்தனர்.

Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூவர் மரணமடைந்தனர்.
இவர்கள் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான பரீரன் புவனேந்திரன், முன் இருக்கையில் பயணித்த 52 வயதான ஸ்ரீரதி புவனேந்திரன், பின் இருக்கையில் பயணித்த 23 வயதான நிலுஷ்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தனது குடும்பத்தை இழந்த பூபலசிங்கம் புவனேந்திரன் Drive Safe For You என்ற விழிப்புணர்வு அமைப்பை நிறுவி வீதி பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னெடுத்து வருகிறார்.
மரணித்த தனது மனைவி, குழந்தைகளை நினைவு கூரவும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் Markham Road and Steeles Ave பகுதியில் அமைந்துள்ள John Daniels பூங்கா பகுதியில் October மாதம் 12-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன், Toronto நகரசபை உறுப்பினர் நீதன் சான், York பிராந்திய காவல்துறையின் பிரதிநிதிகள், பரீரன் புவனேந்திரனின் ஆரம்ப பாடசாலை ஆசிரியர், குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட பலரும் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், காவல்துறையின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், குடும்ப நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் இறுதியில் $10,000 நிதி York பிராந்திய காவல்துறையின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
தவிரவும் தமிழ் சமூக மையத்திற்கும் மேலும் $10,000 தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த பணம் சிறு வயது முதல் பரீரென் புவனேந்திரன் சேமித்து வந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
