இலங்கைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25-ஆம் ஆண்டு நினைவும் நீதிக்கான கூடலும் கனடாவில் நடைபெறுகிறது.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவோடு, இலங்கைத்தீவில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான சர்வதேச நீதியை வலியுறுத்தும் ஒன்றுகூடலாக இது அமையவுள்ளது.
ஊடகவியலாளர் இலங்கதாஸ் பத்மநாதன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்வில் மூத்த ஊடக ஆசிரியர் S. திருச்செல்வம், ஊடகவியலாளர் வாசகன் இரட்ணதுரை, முன்னாள் வீரகேசரி ஆசிரியர் வீ.தேவராஜ், சுயாதீன ஊடகவியலாளர் உதயன் S. பிள்ளை, மயில்வாகனம் நிமலராஜனின் சகோதரி செல்வராணி நிரஞ்சன், யாழ். ஊடக மைய நிறுவனர் இரத்தினம் தயாபரன், முன்னாள் BBC மூத்த தயாரிப்பாளர் சந்தன கீர்த்தி பண்டார, முன்னாள் BBC நிருபர் Frances Harrison ஆகியோர் நினைவுகளையும் கருத்துரைகளையும் வழங்குகின்றனர்.
October 18-ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு 555 Cochrane Dr, Markham நகரில் அமைந்துள்ள JC’s Banquet at Park Inn By Radisson மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையைத் தொடர்ந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய நூல் வடிவிலான அறிக்கையின் ஆங்கில, தமிழ்ப் பிரதிகளைக் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் – இலங்கை (ITJP-Sri Lanka) என்ற அமைப்பு இந்த நூல் வடிவிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கைத்தீவில் மறுக்கப்பட்ட உள்ளக நீதி குறித்தும், கொலையாளிகளைப் பாதுகாத்த அரசு தொடர்பாகவும், சர்வதேச நீதியின் முக்கியத்துவம் குறித்தும் இந்த நூல் வலியுறுத்துகிறது.
சமூக அரசியல் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி இந்த நிகழ்வை கனடாவில் ஏற்பாடு செய்கிறார்.
