கனடிய தபால் ஊழியர்கள் சங்கம் நாடு தழுவிய தமது வேலை நிறுத்தத்தை சுழற்சி முறையிலான வேலை நிறுத்தமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (11) முதல் தொடரும் தமது வேலை நிறுத்தம் சுழற்சி முறையிலான வேலை நிறுத்தமாக மாற்றம் பெறும் என தபால் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவித்தது.
கனடிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் Jan Simpson வியாழக்கிழமை (09) இரவு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இந்த முடிவை அறிவித்தார்.
சனி காலை ஆறு மணி முதல் சுழற்சி முறையில் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.
சுழற்சி முறையிலான வேலை நிறுத்தம் கனடியர்கள் தமது தபால் சேவைகளை பெறுவதை உறுதிப்படுத்தும் அதேநேரம் தொழிலாளர்களுக்கு சிறந்த தொழில் ஒப்பந்தத்திற்காகவும் வலுவான பொது தபால் சேவைக்கான போராட்டத்தை தொடர வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
தபால் ஊழியர் சங்கத்தின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் September 25-ஆம் திகதி ஆரம்பமானது.
அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான வீடுகளுக்கான தபால் விநியோகத்தை நிறுத்தும் முடிவை மத்திய அரசாங்கம் அறிவித்த சில மணி நேரத்தில் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தம் தபால் ஊழியர்கள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.
இதனால் கடந்த இரண்டு வாரங்களாக புதிய கடிதங்கள், பொதிகள் ஏற்றுக் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சில தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன.
அரசாங்க நலத் தொகை காசோலைகள் உட்பட சில சேவைகள் மாத்திரம் இந்த வேலை நிறுத்தத்தின் மத்தியில் தொடர்ந்தது.
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் சிறு தொழில்களுக்கு மாத்திரம் $1 பில்லியனுக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இரண்டு வருடங்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், ஒரு தீர்வைக் காண இரு தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது என தொழில்துறை அமைச்சர் Patty Hajdu புதன்கிழமை (08) செய்தியாளர்களிடம் கூறி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
