கனடாவின் மூத்த அமைச்சர்கள் இருவர் வர்த்தகம் குறித்து கலந்துரையாடல்களுக்காக Mexico பயணமாகின்றனர்.
நிதி அமைச்சர் Francois-Philippe Champagne, வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அமைச்சர்கள் இருவரும் இந்த வாரம் Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum, அரசாங்க அதிகாரிகளுடன் Mexico நகரில் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்கள் என கனடிய அரசாங்க தரப்பு செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்த சந்திப்புகள் செவ்வாய் (05), புதன் (06) கிழமைகளில் நடைபெறவுள்ளன.
அமெரிக்காவிற்கு வெளியே தனது வர்த்தக கூட்டாண்மைகளை மேம்படுத்த கனடா முயற்சிக்கும் நிலையில் இந்த சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தப் பேச்சுக்களில் வர்த்தகம் தவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், கனடிய பிரதமர் Mark Carney, Mexico ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.
இந்த உரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் இணங்கினர்.
கனடா, Mexico ஆகிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள நேரத்தில், இந்த பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சி என கனடிய வணிகத் தலைவர்கள் தெரிவித்தனர்.
கனடா-அமெரிக்கா-Mexico ஒப்பந்தத்தில் உள்ளடங்காத கனடிய இறக்குமதிக்கு அமெரிக்கா கடந்த வாரம் புதிய 35 சதவீத வரியை விதித்துள்ளது.
ஆனாலும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர Mexico-விற்கு 90 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.
கனடிய இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் வரி கட்டண உயர்வைக் கண்டித்த Mark Carney, கனடா – அமெரிக்கா – Mexico ஒப்பந்தத்திற்கான கனடாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .
