கனடாவின் நான்கு பிரதான விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் பிரதமரின் திட்டம் குறித்த தகவல் வெளியானது.
நான்கு மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களை தனியார் முதலீடுகளுக்கு திறந்துவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் Mark Carney அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Toronto நகரில் நடைபெற்று வரும் முதலாவது கனடா முதலீட்டு மாநாட்டின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (15) இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
Toronto Pearson, Montreal-Trudeau, Vancouver, Calgary ஆகிய சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகளில் தனியார் முதலீட்டாளர்கள், சர்வதேச சொத்து மேலாளர்களை இணைக்க Mark Carney அரசு முடிவு செய்துள்ளது.
இது விமான நிலையங்களை முழுமையாகத் தனியார் வசம் விற்பனை செய்யும் “தனியார் மயமாக்கல்” அல்ல என குறிப்பிட்ட Mark Carney மாறாக இது ஒரு நீண்ட கால சலுகை ஒப்பந்தம் மட்டுமே என செய்தியாளர்களிடம் கூறினார்.
கனடாவின் புதிய பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவதற்காகப் பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ள $1 trillion மூலதனச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமான நிலைய தனியார் மயமாக்கல் திட்டம் நோக்கப்படுகிறது.
தற்போது இந்த விமான நிலையங்கள் அரசுக்குச் சொந்தமான இலாப நோக்கற்ற உள்ளூர் அதிகார அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் இந்தத் அதிரடிப் பொருளாதார உத்தி, ஆளும் Liberal கட்சிக்குள் விவாதங்களை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் குறிப்பிட்ட தனியார் மயமாக்கல் திட்டத்தின் நன்மைகள், சவால்கள், பொது மக்களின் வரிப்பணம் குறித்த தாக்கங்கள் குறித்து விவாதிக்க, Liberal கட்சி நாடாளுமன்றக் குழுவினர் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அரசின் இந்த முடிவை அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த அறிவிப்புக்கு கனடாவின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கங்களான Unifor, கனடிய தொழிலாளர் காங்கிரஸ் (CLC) ஆகிய இரு அமைப்புகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
