யூதர்களின் புனித பண்டிகை காலத்தில் Toronto நகரம் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் யூதர்களின் புனித பண்டிகைகளான Rosh Hashanah, Yom Kippur ஆகியவற்றை முன்னிட்டு, Toronto நகரம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Toronto-வில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Toronto காவல்துறை தலைமை அதிகாரி Myron Demkiw, Toronto நகர முதல்வர் Olivia Chow ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதற்கான விரிவான பாதுகாப்பு திட்டங்களை வெளியிட்டனர்.
Toronto-விலும் உலகளவிய ரீதியிலும் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக Myron Demkiw செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மேலதிக அதிகாரிகள் Toronto நகரம் முழுவதும் வெளிப்படையாகவும், அதே நேரத்தில் இரகசிய கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவர் என Myron Demkiw கூறினார்.
இந்த பாதுகாப்பு September 11 ஆரம்பித்து, அடுத்த மாதம் 7-ஆம் திகதி வரை தொடர ஏற்பாடாகியுள்ளது.
“யூத மக்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அல்லது சமூக மையங்களுக்கு செல்வதற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு தேவைப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது” என Toronto நகர முதல்வர் Olivia Chow செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
Toronto நகரம் ‘யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு துணிச்சலுடன் வெளிப்படும் ஒரு தருணத்தை’ எதிர்கொள்வதாகவும் Olivia Chow கூறுகிறார்.
செவ்வாயன்று திட்டமிடப்பட்டிருந்த யூத எதிர்ப்பு குறித்த நகர முதல்வர் வேட்பாளர் விவாதத்தை Olivia Chow தவிர்த்ததற்காக அவர் தனது அரசியல் போட்டியாளர்களிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அவரது இந்தக் கருத்து வெளியானது.
புதன்கிழமை (09) தனது தேர்தல் பிரச்சாரத்தை Oivia Chow ஆரம்பிக்க உள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என அவரது பிரச்சாரக் குழு அறிவித்தது.
