September 18, 2026
தேசியம்
செய்திகள்

வர்த்தக பேச்சுவார்த்தையின் சில நிலைப்பாடுகளை மாற்றும் அமெரிக்கா?

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் சில நிலைப்பாடுகளை அமெரிக்கா மாற்றிக் கொண்டுள்ளதாக அமெரிக்கா-கனடா வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

மொழி, கலாச்சாரம் தொடர்பான நிலைப்பாடுகளை ‘திரும்பப் பெறும்’ அமெரிக்காவின் முடிவை அமைச்சர் Dominic LeBlanc வரவேற்கிறார்.

எல்லை தாண்டிய வர்த்தக பேச்சுவார்த்தையில், கனடாவின் பிரெஞ்சு மொழி பாதுகாப்பு, கலாச்சார இறையாண்மையை வலுவிழக்கச் செய்வதற்கான கோரிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது.

“தங்கள் நிலைப்பாடுகளை மீளப் பெறுவதன்” மூலம், கனடாவின் கலாச்சாரக் கொள்கைகள் இனி நியாயமற்ற வர்த்தக தடைகளாக கருதப்படாது என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த மாற்றத்தை கனடா வரவேற்கிறது என அமைச்சர் Dominic LeBlanc வியாழக்கிழமை (27) கூறினார்.

அமெரிக்காவின் இந்த நகர்வு இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு பெரும் தடையை நீக்குகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

“கனடாவின் இறையாண்மையை மதிக்கும் வகையில், இரு தரப்புக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் ஏனைய நிலைப்பாடுகள் குறித்த ஆக்கபூர்வமான விளக்கங்களை கனடா எதிர்பார்க்கும்” எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் இன்னும் சாத்தியமாகலாம் என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை (21) இணக்கப்பாடுகள் எதுவும் இல்லாமல் முடிவடைந்தது.

அமெரிக்கா முன்வைத்த இறுதி நேர கோரிக்கைகள் இணக்கம் காணப்படுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்ததாக பிரதமர் Mark Carney கூறியுள்ளார்.

அமெரிக்க வர்த்தகத்திற்கு செலவு மிக்க தடைகளாக கருதிய விதிகளை அமெரிக்கா எதிர்த்தது.

கட்டாய இரு மொழிப் பொருள் குறியிடல் (bilingual product labelling) இதில் அடங்குகிறது.

பிரதமர் Mark Carney இந்தக் கொள்கையை ஆணித்தரமாக ஆதரித்தார்.

பிரெஞ்சு மொழி, கனடிய கலாச்சாரம் ஆகியவை பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட வர்த்தகப் பொருட்கள் அல்ல, மாறாக அவை ‘அடிப்படை உரிமைகள்’ என பிரதமர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தையின் போது பிரெஞ்சு உள்ளடக்கத்தைக் கண்டறியும் தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது என Jamieson Greer தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்திருந்தார்.

Related posts

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan

234 கனேடியர்கள் ஞாயிறு காசாவை விட்டு வெளியேறினர்

Lankathas Pathmanathan

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாடு-கனடா அறிந்திருந்தது: கணக்காய்வாளர் நாயகம்

Gaya Raja

Leave a Comment