கனடிய மத்திய வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை (10) மத்திய வங்கியின் வட்டி விகிதம் அறிவித்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமின்றி இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய வங்கி கடந்த April மாதம் கூடிய போது, தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக மாற்றாமல் வைத்திருந்தது.
அந்த அறிவித்தலின் போது மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem எதிர்கால மாற்றங்களை நிராகரிக்கவில்லை.
ஈரான் யுத்தத்தினால் எரிசக்தி விலைகளில் ஏற்படும் தாக்கங்களையும் , கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் வரவிருக்கும் ஆய்வு முடிவுகளையும் மத்திய வங்கி கண்காணித்து வருவதால், பணவியல் கொள்கை நெகிழ்வாக இருக்க வேண்டியிருக்கும் என அவர் கூறியிருந்தார்.
ஈரான் யுத்தம் காரணமாக ஏற்பட்ட எரிவாயு விலை உயர்வு, April மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதத்தை 2.8 சதவீதமாக உயர்த்தியது.
April மாதத்தில் 6.9 சதவீதமாக இருந்த நாடளாவிய வேலையற்றோர் விகிதம், May மாதத்தில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை (05) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
