Barcelona-வில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மூன்று Toronto காவல்துறை அதிகாரிகளும் ஊதியத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw, வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
அவர்கள் மூவரும் தற்போது கனடா திரும்பிவிட்டனர் என குறிப்பிட்ட Myron Demkiw, அவர்களின் பணி இடைநீக்கங்களை உறுதிப்படுத்தினார்.
Toronto காவல்துறையினரின் செயல்முறைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான விபரங்களை பெறுவதற்காக, Spain காவல்துறையினருடன் தொடர்பு கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் அவர் தெரிவித்தார்.
பணியில் இல்லாத மூன்று அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட “கடுமையான” குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக Toronto காவல்துறை (Toronto Police Service – TPS) முன்னர் தெரிவித்தது.
Spain-னில் விடுமுறையில் இருந்த மூன்று Toronto காவல்துறை அதிகாரிகள் ஒரு பாலியல் தொழிலாளியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன..
இவர்கள் எந்த ஒரு அதிகாரப்பூர்வப் பணிக்காகவும் பயணிக்கவில்லை எனவும் TPS செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இவர்கள் மூவரும் May 15 அன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்த விபரங்கள், குற்றச்சாட்டுகள் வெளியிடப்படவில்லை.
இதில் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அதிகாரிகளின் அடையாளங்களை வெளியிடவில்லை என Toronto காவல்துறை தெரிவித்துள்ளது.
Toronto காவல்துறை சங்கம் (Toronto Police Association -TPA) தமது மூன்று உறுப்பினர்கள் தொடர்பான சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகக் கூறிய போதிலும், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகள் பணி இல்லாத நேரத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பானவை என்பதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கவில்லை என TPA கூறியது.
இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
