Toronto நகரசபை உறுப்பினரும் தமிழருமான பார்த்தி கந்தவேள் Ontario மாகாண காவல்துறையின் (OPP) விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
Toronto காவல்துறையிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் OPP இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அவரது பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியான ஒரு பதிவில் இந்த விசாரணையை பார்த்தி கந்தவேள் உறுதிப்படுத்தினார்.
இந்த விசாரணை குறித்து அறிந்தபோது ஆச்சரியமடைந்ததாக தெரிவித்த அவர், அந்த விசாரணையின் தன்மை குறித்து மேலதிக விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.
Scarborough Southwest (தொகுதி 20) நகரசபை உறுப்பினரான பார்த்தி கந்தவேள் 2023 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக Toronto காவல்துறையிடமிருந்து ஒரு பரிந்துரையைப் பெற்ற OPP இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது.
“இந்த விசாரணை தொடரும் நிலையில் மேலதிக கருத்துக்களையோ விவரங்களையோ வழங்க முடியாது” என தேசியம் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்த OPP செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலதிக விவரங்களுக்கு ஞாயிறு பிற்பகல் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட பார்த்தி கந்தவேளின் அறிக்கையைப் பார்வையிடுமாறு OPP மேலும் தெரிவித்தது.
இந்த குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்தோ அல்லது தங்களுக்கு எப்போது புகார் கிடைத்தது என்பது குறித்தோ Toronto காவல்துறையும் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
இந்த விடயம் குறித்து அவரது கருத்தை அறிவதற்காக ஊடகம் ஒன்று வெள்ளிக்கிழமை (08) பார்த்தி கந்தவேள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதாக தேசியம் அறிகிறது
இந்த நிலையில் குறிப்பிட்ட விசாரணை குறித்து பார்த்தி கந்தவேள் ஞாயிற்றுக்கிழமை (10) தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து OPP விசாரணை நடத்தி வருவதை வெள்ளி மதியம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை, குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து தான் மேலும் விரிவாக தெரிந்து கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
“நான் மிக உயர்ந்த நெறிமுறைகளையும் நேர்மையையும் பேண முயன்றுள்ளேன்” என தெரிவித்த பார்த்தி கந்தவேள், இதற்கு மாறாக கூறப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் பதிலடி கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
இது ஒரு கடினமான செய்தி என்பதை உணர்வதாக தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையை விரைவில் தீர்க்க முடியும் என நம்புவதாக மேலும் தனது அறிக்கையில் கூறினார்.
இந்த விசாரணை குறித்த மேலதிக விவரங்களுக்கு Toronto காவல்துறை, பார்த்தி கந்தவேள் அலுவலகம் ஆகியவற்றை தேசியம் தொடர்பு கொண்டுள்ளது.
October 26 அன்று நடைபெறவிருக்கும் 2026-ஆம் ஆண்டு நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக, வேட்பாளர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு ஆரம்பித்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த விசாரணை குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விசாரணை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பார்த்தி கந்தவேளின் திட்டங்களைப் பாதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை (09) வரை பார்த்தி கந்தவேள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தனது பெயரை பதிவு செய்யவில்லை.
அவரது Scarborough Southwest தொகுதியில் போட்டியிட இதுவரை இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே பெயர் பதிவு செய்துள்ளனர்.
நீண்டகால முன்னாள் நகரசபை உறுப்பினரான Gary Crawford, Progressive Conservative கட்சிக்காக மாகாண இடைத் தேர்தலில் போட்டியிட்டதைத் தொடர்ந்து, நடந்த இடைத்தேர்தலில் பார்த்தி கந்தவேள் வெற்றி பெற்றார்.
பார்த்தி கந்தவேள் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகசபைத் தேர்தலில் Gary Crawford-இடம் தோல்வியடைந்தார்.
2023-இல் பார்த்தி கந்தவேள் 4,641 வாக்குகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்த Kevin Rupasinghe-வை சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
நகரசபை உறுப்பினராவதற்கு முன்னதாக பார்த்தி கந்தவேள் 2014 முதல் 2022 வரை இரண்டு முறை TDSB அறங்காவலராகப் பணியாற்றினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை..
