Toronto நகர பாடசாலை வாரியத்தின் 12 புதிய அறங்காவலர் தொகுதிகள் வெளியாகின.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது.
பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இதில் Toronto பாடசாலை வாரியத்தின் 12 புதிய தொகுதிகளுக்கும் அறங்காவலர்கள் தெரிவாகவுள்ளனர்.
தற்போது உள்ள 22 அறங்காவலர் தொகுதிகளுக்கு பதிலாக, 12 தொகுதிகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Ontario மாகாணத்தில் பாடசாலை நிர்வாகத்தை சீர்திருத்தும் நோக்கில், இந்த மாத ஆரம்பத்தில் மாகாண அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இந்த எண்ணிக்கை குறைப்பு அமைந்துள்ளது.
ஒருவரைத் தவிர, ஒவ்வொரு புதிய அறங்காவலரும் Toronto-வின் இரண்டு தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்.
ஏழாவது தொகுதிக்கான அறங்காவலர், Toronto-St. Paul’s, University-Rosedale, Toronto Centre ஆகிய நகர தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

நிதி முறைகேட்டை காரணம் காட்டி, Ontario பாடசாலை வாரியத்தை தனது மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்ததை தொடர்ந்து, தற்போதைய 22 Toronto கல்விச் சபை அறங்காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டதில் தமிழர்களும் அடங்குகின்றனர்.
கடந்த நகரசபை தேர்தலில் Toronto கல்விச் சபை அறங்காவலர் பதவிக்கு மூன்று தமிழர்கள் தெரிவாகினர்.
நீதன் சான் (Scarborough Center), யாழினி ராஜகுலசிங்கம் (Scarborough North), அனு ஸ்ரீஸ்கந்தராஜா (Scarborough-Agincourt) ஆகியோர் கடந்த தேர்தலில் கல்விச் சபை அறங்காவலர் உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
இவர்களில் நீதன் சான் மீண்டும் Toronto நகரசபை உறுப்பினராக வெற்றி பெற்றார்.
கடந்த October மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் நீதன் சான் வெற்றி பெற்று Scarborough-Rouge Park தொகுதியின் நகர சபை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
