Liberal அரசாங்கத்தின் வசந்த கால பொருளாதார அறிக்கையில் ‘நல்ல செய்திகள்’ அடங்கியுள்ளன என பிரதமர் உறுதியளித்தார்
Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கத்தின் வசந்த காலப் பொருளாதார அறிக்கை செவ்வாய்க்கிழமை (28) வெளியாகவுள்ளது.
Liberal கட்சியினர் “சிறந்த நிதி மேலாளர்கள்” என வலியுறுத்திய பிரதமர், செவ்வாய் பிற்பகல் மத்திய அரசு தனது வசந்த கால பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கும் போது அதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தனது பொருளாதார, நிதி கணிப்புகளை திருத்துவதற்காக, வருடாந்த வரவு செலவுத் திட்டங்களுக்கு இடையில் அரையாண்டுத் திருத்தங்களை சமர்ப்பிப்பதை மத்திய அரசு வழக்கமாக கொண்டுள்ளது.
புதிய செலவினங்களை உள்ளடக்கியிருக்கும் இந்தத் திருத்தங்கள் சில சமயங்களில் “குறு வரவு செலவுத் திட்டங்கள்” (mini-budgets) என குறிப்பிடப்படுகின்றன.
Mark Carney தலைமையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது Liberal இலையுதிர் கால வரவு செலவுத் திட்டம், கடந்த நிதியாண்டில் $78.3 பில்லியன் பற்றாக்குறையை முன்னறிவித்தது.
வரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் பற்றாக்குறைகள் குறைந்து, ஆண்டுக்குச் சராசரியாக சுமார் $64 பில்லியனாக இருக்கும் எனவும் அதில் எதிர்வு கூறப்பட்டது.
April 2025 முதல் February 2026 வரையிலான மத்திய அரசின் நிதி கண்காணிப்பு அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் பற்றாக்குறை $25.5 பில்லியனாக இருந்தது.
March மாதத்தில் வழக்கமாக பற்றாக்குறையில் ஒரு பெரிய ஒரு மாத கால அதிகரிப்பு காணப்படுகிறது.
இருப்பினும், 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கணிக்கப்பட்டதை விட மத்திய அரசு குறைந்த பற்றாக்குறையை பதிவு செய்யும் என சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்
கடந்த November மாதம் தங்களது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, Liberal கட்சி சிறுபான்மை அரசாங்கமாக இருந்தது.
இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்களிலும் Liberal கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (27) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றனர்.
இதன் மூலம் ஒரு முறையான பெரும்பான்மை அரசாங்கத்தை கொண்டுள்ள Mark Carney சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான கூடுதல் அதிகாரத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
