மெக்சிகோவில் உல்லாசப்பயணிகளின் பிரதான சுற்றுலாத்தளம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கனடியர் ஒருவர் பலியானார்.
உல்லாசப்பயணிகளின் மத்தியில் பிரபலமான Teotihuacan pyramids சுற்றுலாத்தலத்தை திங்கட்கிழமை (20) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
எதிர்வரும் கோடை காலத்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்காக இலட்சக்கணக்கான பார்வையாளர்களை வரவேற்கும் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுப் பாதுகாப்பு குறித்து மெக்சிகோ விமர்சனங்களை எதிர் கொண்டுள்ள சூழலில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் கனடியர் ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்தனர் என மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்தது.
பிரபலமான தொல்பொருள் தளத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார் என அமைச்சரவை மேலும் தெரிவித்துள்ளது.
கனடியர் ஒருவர் கொல்லப்பட்ட, மற்றொருவர் காயமடைந்த இந்த சம்பவத்தை கனடாவின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூதரக அதிகாரிகள் உதவி வருவதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் நாடுகளின் தூதரகங்களுடனும் தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு தேவையான உதவிகளை வழங்க பணியாற்றி வருவதாகவும் மெக்சிகோ வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
