புதிய கனடிய கடவுச்சீட்டை பெறுவதற்கான கட்டணம் இந்த மாத இறுதி முதல் அதிகரிக்கிறது.
March 31 முதல் பெரும்பாலான கடவுச்சீட்டுகள், பயண ஆவணங்களுக்கான கட்டணங்கள் அதிகரிக்கும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பு பணவீக்கம், பாதுகாப்பான பயண ஆவணங்களை தயாரிப்பதற்கான அதிகரித்து வரும் செலவைப் பிரதிபலிக்கிறது என குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு செவ்வாய்க்கிழமை (10) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
கனடாவிற்குள் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, ஐந்து வருடத்திற்கான வயது வந்தோர் கடவுச்சீட்டின் விண்ணப்பக் கட்டணம் $2.50 உயர்ந்து $122.50 ஆக மாறும் .
அதே நேரத்தில் 10 வருடத்திற்கான வயது வந்தோர் கடவுச்சீட்டின் விண்ணப்பக் கட்டணம் $3.50 உயர்ந்து $163.50 ஆக இருக்கும்.
ஐந்து வருடத்திற்கான குழந்தைகள் கடவுச்சீட்டின் விண்ணப்பக் கட்டணம் $1.50 அதிகரித்து $58.50 ஆக இருக்கும்.
கனடாவிற்கு வெளியே வசிக்கும் கனடியர்களுக்கு, 10 வருடத்திற்கான வயது வந்தோர் கடவுச்சீட்டின் விண்ணப்பக் கட்டணம் $6.25 உயர்ந்து $266.25 ஆக இருக்கும்.
ஐந்து வருடத்திற்கான வயது வந்தோர் கடவுச்சீட்டின் விண்ணப்பக் கட்டணம் $4.25 ஆக அதிகரித்து $194.25 ஆக இருக்கும்.
அவசர பயண ஆவணம், வார இறுதி அல்லது விடுமுறை நாள் சேவை, தற்காலிக கடவுச்சீட்டு அல்லது இடைக்கால கடவுச்சீட்டுக்கான கட்டணங்களையும் அரசாங்கம் அதிகரிக்கிறது.
2013-ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடவுச்சீட்டு கட்டணத்தில் இதுவே முதல் அதிகரிப்பு என அரசாங்கம் கூறுகிறது.
மேலும் இனி ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு விண்ணப்பம் 30 நாட்களுக்குள் செயல்முறைக்குள்ளாகும் அல்லது அது இலவசமாக வழங்கப்படும் எனவும் மத்திய அரசாங்கம் உறுதியளிக்கிறது.
