கனடிய குடிமகன் ஒருவர் ஈரானில் மரணமடைந்தார்.
ஈரானில் பரவலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு கனடிய குடிமகன் இறந்துள்ளார் என தெரியவருகிறது.
கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (15) ஒரு சமூக ஊடகப் பதிவில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
“எங்கள் தூதரக அதிகாரிகள் கனடாவில் உள்ள பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர்” என அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தனியுரிமை காரணங்களுக்காக பாதிக்கப்பட்டவரின் அடையாளம் குறித்து எந்த தகவலையும் வெளியிட வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
இந்த நிலையில் ஈரானிய அரசின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தொடர்ச்சியான விரோதப் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
போராட்டக்காரர்களை ஈரான் அரசாங்கம் நடத்திய விதத்தை கண்டித்த அனிதா ஆனந்த், ஈரான் வன்முறை ஆட்சி உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ஈரானில் தொடரும் வன்முறைக்கு மத்தியில் பல வணிக விமான சேவை நிறுவனங்கள் தமது விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
புதன்கிழமை (14) நிலவரப்படி, ஈரானில் பதிவு செய்யப்பட்ட கனடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மொத்தம் 3,054 பேர் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை கனடா அதிகரித்துள்ளது.
அந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து வரும் பதட்டங்கள் காரணமாக, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடிய அரசாங்கம் கூறியது.
LJI Reporter ரம்யா சேது
