இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
அயலகத் தமிழர் தினம் 2026 சென்னையில் ஞாயிறு (11), திங்கட்கிழமைகளில் (12) நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் அழைக்கப்பட்டார்.
அங்கு உரையாற்றிய அவர், தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாடு அரசு ஊக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஈழத்தமிழ் அகதிகளுக்கு செய்யும் அனைத்து உதவிகளுக்கும் ஈழத்தமிழராக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என தனது உரையில் ஜுனிதா நாதன் கூறினார்.
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதையும் ஜுனிதா நாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 75 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான தூதரக உறவுகளை குறிப்பிட்ட அவர், இரு நாட்டு உறவு வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக மேலும் வலுவடைந்து வருவதாக கூறினார்.
இந்தப் பொருளாதார உறவுகளில் தமிழ்நாடும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என நம்புவதாகவும் ஜுனிதா நாதன் தெரிவித்தார்.
முன்னாள் Markham நகரசபையின் ஏழாம் வட்டார உறுப்பினரான ஜுனிதா நாதன், கடந்த கனடிய பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்.
LJI Reporter ரம்யா சேது
