இலங்கைத்தீவில் Ditwah புயல் ஏற்படுத்திய வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உதவ உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடிய தமிழர் பேரவையின் (CTC) ஒரு குழு தலைநகர் Ottawa-வில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.
வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடிய அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்ததாக CTC தெரிவித்தது.
இந்த சந்திப்புகள் செவ்வாய் (02) , புதன் (03) கிழமைகளில் நடைபெற்றதாக CTC ஒரு சமூக ஊடக அறிக்கையில் தெரிவித்தது.
ஏற்கனவே ஆழ்ந்த வறுமையாலும், போரின் நீடித்த தாக்கங்களாலும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளுக்கு அதிக கவனமும் ஆதரவும் தேவை என்பதை தமது பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியதாக CTC குறிப்பிட்டது.
புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான நீர், உணவு, மருத்துவப் பொருட்கள், மறுகட்டமைப்பு உதவிகளின் தேவை குறித்து இந்த சந்திப்புகளில் கவனம் செலுத்தப்பட்டது.
கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி தாமதமின்றி சென்றடைய, அவசர மனிதாபிமான நிவாரண நிதியை கனடிய அரசாங்கத்திடமிருந்து CTC கோரியுள்ளது.
LJI Reporter ரம்யா சேது
