Brampton நகர வீட்டுத் தீ விபத்தில் ஒரு பிறக்காத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததாக உறவினர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை (20) அதிகாலை வாடகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், ஒரு பிறக்காத குழந்தை இறந்ததாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் இருக்காத உறவினர் Jugraj Singh தெரிவித்தார்.
இந்த குடியிருப்பில் வசித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 என தெரிவிக்கப்படுகிறது.
பல தலைமுறைகளை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், இரண்டு குத்தகைதாரர்கள் இந்த வீட்டின் அடித்தள பிரிவில் வாழ்ந்ததாக தெரியவருகிறது.
இந்த வீட்டின் அடித்தள பிரிவில் வாழ்ந்த இருவரும் காயமின்றி தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து உள்ளனர்.
நான்காவது நபர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்கு பேரும் எரியும் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக சம்பவ இடத்தில் ஊடகங்களிடம் பேசிய Brampton நகர முதல்வர் Patrick Brown கூறியிருந்தார்.
இந்த வீட்டின் உரிமையாளர் நீண்ட காலமாக நாட்டிற்கு வெளியே இருப்பதாகவும் Patrick Brown கூறினார்.
நாட்டிற்கு வெளியே வசிக்கும் வீட்டு உரிமையாளர், 2019-ஆம் ஆண்டிலேயே அடித்தளத்தில் இரண்டாவது குடியிருப்பை உருவாக்க கட்டிட அனுமதி விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.
ஆனாலும் இந்த வீட்டில் புதுப்பித்தல் பணிகளை ஆய்வு செய்ய, Brampton நகர கட்டிட அதிகாரிகளுக்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் Patrick Brown தெரிவித்தார்.
இந்த தீ சம்பவம் குறித்த விசாரணை தொடரும் நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் கூறவில்லை.
Peel பிராந்திய காவல்துறை, Brampton தீயணைப்பு, அவசர சேவை பிரிவு, Fire Marshal அலுவலகம் ஆகியவை திங்கட்கிழமை (24) தமது விசாரணை குறித்த மேலதிக விபரங்களை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
