கனடாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை CSIS எனப்படும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் இயக்குனர் கோடிட்டுக் காட்டினார்.
ரஷ்யா, சீனா, ஈரான், இந்தியா ஆகிய நாடுகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை CSIS இயக்குனர் Dan Rogers விபரித்தார்.
கனடாவின் எதிரிகளின் உளவு, நாடு கடந்த அடக்குமுறை முயற்சிகளை பட்டியலிடும் போது இந்த நான்கு நாடுகளின் பெயர்களை அவர் குறிப்பிட்டார்.
இந்த நாடுகளால் கனடா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்தும் தேசிய பாதுகாப்பு சவால்களுக்கு எதிரான தனது போராட்டம் குறித்தும் வியாழக்கிழமை (13) ஒரு உரையில் கனடாவின் உளவுத்துறை தலைவர் விவரித்தார்.
அரச, தனியார் துறையை ரஷ்யா உளவு பார்த்து வருவதாக குறிப்பிட்ட அவர் கனடாவிற்கு உளவுத்துறை அதிகாரிகளை அனுப்ப முயற்சிக்கிறது எனவும் உக்ரைனுக்கு எதிரான போருக்கு கனடாவில் பொருட்களை கொள்வனவு செய்வதாகவும் கூறினார்.
இதற்கிடையில், சீனாவின் இராணுவ, உளவுத்துறை சேவைகள் இரகசியமான, உணர்திறன் கொண்ட கனடிய அரச தகவல்களை பெற முயற்சிப்பதாகவும் Dan Rogers குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில், ஈரானிய உளவுத்துறை தாங்கள் எதிரிகளாகக் கருதும் பல நபர்களை குறி வைத்துள்ளன என தெரிவித்த அவர், இது கனடாவில் தனிநபர்களுக்கு எதிரான பல ஆபத்தான அச்சுறுத்தல்களை சீர்குலைக்க கனடாவின் உளவுத்துறையை தூண்டியது எனக் கூறினார்.
வெளிநாட்டு அரச ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், கலாச்சார, இன, மதக் குழுக்களை குறிவைத்து நாடு கடந்த அடக்குமுறையில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இந்திய அரசாங்கம் பெயரிடப்பட்டுள்ளது.
