தமிழ்ச் சமூக மையத்திற்கான நிதி சேகரிப்பு கால எல்லை நீடிக்கப்படுகிறது.
இந்த நிதி சேகரிப்பு கால எல்லையை நீடிப்பதற்கான கோரிக்கை அரசாங்கத்தின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்ச் சமூக மையம் தெரிவித்தது.
தமிழ்ச் சமூக மையத்தின் 2025–2026 ஆம் ஆண்டுக்கான இயக்குநர்கள் சபை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
இந்த நிதி சேகரிப்பு கால எல்லையை 2026ம் ஆண்டு January 31-ஆம் திகதிவரை நீடிப்பதற்கான கோரிக்கை அரசாங்கத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய காலக்கெடு எமது சமூகத்தின் மீது அதிகரித்த அழுத்தங்களை ஏற்படுத்தும் என்ற போதிலும், மூன்று நிலை அரசுகளின் உறுதியான பங்களிப்புடன் எமக்கான சமூக மையத்தை உருவாக்க கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை ஒரு சமூகமாக தவறி விடக்கூடாது என தமிழ்ச் சமூக மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சமூக மையத்தினை உருவாக்குவதற்கான முதல் கட்ட நிதி சேகரிப்பு இலக்கான $15 மில்லியன் நிதி சேகரிப்பு முயற்சியில் $6 மில்லியன் நிதி உதவிக்கான உறுதியான ஆதரவினை சமூகத்திடம் இருந்து இதுவரையில் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த September 27-ஆம் திகதி எதிர்பார்த்த இலக்கின் மூன்றில் ஒரு பங்கு பணத்தை மாத்திரம் பெற முடிந்த நிலையில் புதிய கால எல்லை அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
இரண்டு மட்ட அரசாங்கங்களுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் உரையாடல்களின் அடிப்படையில், இந்தக் கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கப்படும் என சமூக மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு மத்திய, மாகாண அரசுகளால் உறுதியளிக்கப்பட்ட 26.3 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு தமிழ்ச் சமூகம் $15 மில்லியன் நிதியினை திரட்ட வேண்டும் என்பது நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
