அனைத்துலகத் தமிழர் பேரவையின் (FGT) இலங்கையின் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கான சர்வதேச மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் குறித்த முதலாவது சர்வதேச ஆய்வு மாநாடாக இது அமைகிறது.
இந்த மாநாடு குறித்த ஊடக சந்திப்பு வியாழக்கிழமை (11) நடைபெற்றது.

அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி இந்த மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் நிலையான பொருளாதார சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
உலகில் பல்வேறு நாடுகளில் பரந்து வாழும் தமிழ் அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இந்த ஆய்வுகள் இலங்கையின் வடக்கு கிழக்கின் முன்னேற்றத்தை மையப்படுத்தியதாக அமையும் என்பதோடு அங்குள்ள கள நிலைமையினை அறிவுபூர்வமாக அணுகுவதற்கான ஒரு வாய்ப்பினையும் வழங்கும் என நம்புவதாக மாநாட்டு ஆய்வரங்கக் குழுவின் இணைத் தலைவர் பேராசிரியர் E.A. செல்வநாதன் தெரிவித்தார்.
October 10, 11-ஆம் திகதிகளில் Toronto பல்கலைக்கழகத்தில் இந்த மாநாட்டின் அமர்வுகள் நடைபெறும்.
12-ஆம் திகதி காலை இந்த மாநாட்டின் பங்கேற்பாளர்களுடன் ஒரு குழு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த இரு நிகழ்வுகளும் நேரடியாகவும், மெய்நிகர் வழியிலும் நடைபெறும் ஏற்பாடாகியுள்ளது.
12 ஆம் திகதி மாலை Scarborough Convention Centre விருந்துபசார மண்டபத்தில் அனைத்துலகத் தமிழர் பேரவையின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த மகாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை conference.tamilfederation.org என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என மாநாட்டுக்கான செயலாளர் அபிநா நிமல்ராஜ் தேசியத்திடம் தெரிவித்தார்.
