வர்த்தகம், புதிய பொருளாதாரம், பாதுகாப்பு உறவு குறித்து கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் உரையாடினர்.
கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆகியோருக்கு இடையில் வியாழக்கிழமை (21) உரையாடல் ஒன்று நிகழ்ந்ததை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
இது ஒரு “பயனுள்ள, பரந்த அளவிலான உரையாடல்” என கனடிய பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
உக்ரைனிலும் ஐரோப்பாவிலும் நீண்ட கால அமைதி குறித்து உரையாடிய இரு நாட்டின் தலைவர்களும், விரைவில் மீண்டும் சந்திக்கவும் இணங்கினர்.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தொடரும் நீடித்த வர்த்தகப் போரின் மத்தியில் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.
இந்த உரையாடலை Mark Carney முன்னெடுத்தார் என கூறிய அரச தரப்பு தகவல் ஒன்று, உரையாடல் நீண்டதும் முக்கியமானதும் என விவரித்தது.
புதிய பொருளாதார, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நம்பிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் இந்த கலந்துரையாடல் பிரதானமானது என கருதப்படுகிறது.
கனடா, அமெரிக்கா, Mexico இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2026-இல் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
