கனடிய தமிழர் பேரவையின் (பேரவை/CTC) நிர்வாக இயக்குநர் டான்டன் துரைராஜா பதவி விலகியுள்ளதாக தெரியவருகிறது.
August 31-ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பதவி விலகல் அமைவதாக தகவல் அறிந்த இரண்டு வெவ்வேறு தரப்புகள் மூலம் “தேசியம்” உறுதிப்படுத்தியது. இந்தப் பதவி விலகல் முடிவு, பேரவையின் தெரிவு செய்யப்பட்ட சில உறுப்பினர்களுக்கு Zoom அழைப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழர் தெருவிழா 2025 இரத்துச் செய்யப்படுவதாக பேரவை இந்த வாரம் புதன்கிழமை (06) அறிவித்த பின்னர் இந்தப் பதவி விலகல் தகவல் வெளியானது.
CTC மறுப்பு!
இந்தச் செய்தியை CTC மறுத்துள்ளது. இந்தப் பதவி விலகல் குறித்து உறுதிப்படுத்துமாறு குறிப்பிட்ட கட்டுரை வெளியாவதற்கு முன்னர் “தேசியம்” பேரவையை தொடர்பு கொண்டது. ஆனாலும் குறிப்பிட செய்தியில் எந்த உண்மையும் இல்லை என பேரவையின் தலைவர் குமார் ரத்னம் கட்டுரை வெளியான பின்னர் தேசியத்திடம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு தெருவிழாவை கனடிய தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என கனடிய தமிழர் தேசிய அவை (தேசிய அவை), கனடிய தமிழர் கூட்டு (கூட்டு) ஆகியோர் தனித்தனியே பகிரங்க அழைப்பு விடுத்தனர். இமாலயப் பிரகடன உடன்படிக்கையில் பங்குபற்றியதற்கு பொறுப்பேற்று பேரவையின் நிர்வாக இயக்குனர் டான்ரன் துரைராஜா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பேரவை ஏற்றுக் கொள்ளாத நிலையில் பேரவைக்கும் தேசிய அவை, கூட்டு ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இந்தப் பின்னணியில் இம்முறை தெருவிழா இரத்துச் செய்யப்படுவதாக பேரவையால் அறிவிக்கப்பட்டது. டான்டன் துரைராஜாவின் பதவி நீக்கம் பேரவையுடனான பேச்சுவார்த்தை தேக்க நிலையை அடைந்ததற்கான பிரதான காரணியாக தேசிய அவை, கூட்டு ஆகியன தமது அண்மைய அறிக்கைகளில் தெரிவித்திருந்தன.
இலங்கதாஸ் பத்மநாதன்
