பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்கெடுப்பின் முதல் நாளில் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற முன்கூட்டிய வாக்கெடுப்பின் முதல் நாளில் கிட்டத்தட்ட 2 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்ததாக ஆரம்ப மதிப்பீடுகள் காட்டுகின்றன.
கனடிய தேர்தல் திணைக்களம் சனிக்கிழமை (19) இந்த தகவலை வெளியிட்டது.
பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு நீண்ட வார விடுமுறை முழுவதும் தொடர்கிறது.
தேர்தல் வாக்களிப்பு April 28 நடைபெற உள்ள நிலையில் இம்முறை முன்கூட்டிய வாக்களிப்புக்கு நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்புக்காக இம்முறை April 18 முதல் April 21 வரை, நாளாந்தம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதலாவது நாளான வெள்ளிக்கிழமை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தாக தெரியவருகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை சில வாக்காளர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாக தெரியவருகிறது.
கனடிய தேர்தல் திணைக்களம் வாக்களிப்பு நிலையங்களை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பது குறித்து பல வாக்காளர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
முன்கூட்டிய வாக்களிப்பின் முதல் நாள் எதிர்கொள்ளப்பட்ட நீண்ட காத்திருப்பு நேரங்களை தேர்தல் திணைக்களம் ஒரு அறிக்கையில் ஒப்புக்கொண்டது.
வார விடுமுறை முழுவதும் தேவை ஏற்படும் போது தொடர்ந்து மாற்றங்களைச் செய்யவும் தேர்தல் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
அதிக வாக்காளர்களை எதிர்கொள்ள அடுத்த சில நாட்களில் தொடர்ந்து மாற்றங்களை முன்னெடுக்க தேர்தல் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
கடந்த 2021 பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 5.8 மில்லியன் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்.
2021 தேர்தலில், நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு 62.6 சதவீதமாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது .
