September 15, 2026
தேசியம்
செய்திகள்

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கனடா வந்தடைந்துள்ளார்.

கனடிய  வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் சிவஞானம் சிறிதரன் கனடா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் Indo-Pacific பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் Weldon Epp உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினரை சிவஞானம் சிறிதரன் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு தலைநகர் Ottawaவில் உள்ள கனடிய வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்பு கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என இந்த சந்திப்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயம் அடங்கிய எழுத்துமூல கோரிக்கை ஒன்றும் இந்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கனடிய பிரதியமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை (23) வரையில் கனடாவில் தங்கியிருக்க உள்ள  சிவஞானம் சிறிதரன் பல்வேறு தரப்பினரையும் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

சிவஞானம் சிறிதரன், வியாழக்கிழமை (19) Montreal நகரிலும், சனிக்கிழமை (21) Toronto நகரிலும், மக்கள் சந்திப்புகளை நடத்த ஏற்பாடாகியுள்ளது

Related posts

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

RCMP இடைக்கால ஆணையராக Mike Duheme நியமனம்

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் நீதன் சான்

Lankathas Pathmanathan

Leave a Comment