தேசியம்
செய்திகள்

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலையில் – 19 வயது இலங்கையர் கைது !

தலைநகர்  Ottawaவில் நிகழ்ந்த படுகொலையில் இலங்கை குடும்பம் அர்த்தமற்ற முறையில் பாதிக்கப்பட்டது குறித்து மனம் உடைந்துள்ளதாக கனடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் ஆறு இலங்கையர்கள் பலியாகினர்.

புதன்கிழமை (06) இரவு தெற்கு Ottawa புறநகர் பகுதியான Barrhavenனில் உள்ள இல்லத்தில்  ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள், குடும்பத்துடன் அறிமுகமானவர் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இவர்கள் ஆறு பேரும் இலங்கையர்கள் என  Ottawaவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியது.

பலியானவர்களின் இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாக கனடாவுக்கான இலங்கைத் துணை உயர் ஆணையர் அன்சுல்  ஜான் தேசியத்திடம் தெரிவித்தார்.

இதில் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயதான தர்ஷனி பன்பரநாயக்க கம வல்வே தர்ஷனி திலந்திகா ஏகன்யகே – Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake, ஏழு வயது இனுகா விக்கிரமசிங்க – Inuka Wickramasinghe, நான்கு வயது அஷ்வினி விக்கிரமசிங்க – Ashwini Wickramasinghe,  இரண்டு வயது ரினியானா விக்கிரமசிங்க – Rinyana Wickramasinghe, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்கவும் Kelly Wickramasinghe மற்றும் 40 வயதான ஜீ காமினி அமரகோன்  – Ge Gamini Amarakoon – என காவல்துறையினரால்  அடையாளங்கள் வெளியிடப்பட்டது.

இவர்களில்  ஜீ காமினி அமரகோனின் உடல் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குடும்பத்தினர் கோரிக்கை அமைவாக அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கைத் துணை உயர் ஆணையர் தெரிவித்தார்.

பலியான ஏனையவர்களின் இறுதி கிரியைகள் கனடாவில் நடைபெறும் எனவும் அவர் தேசியத்திடம் உறுதிப்படுத்தினார்.

சம்பவ இடத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட உயிரிழந்த குடும்பத்தின் தந்தை – கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க – Dhanushka Wickramasinghe, உயிர் ஆபத்தான நிலையை தாண்டி உள்ளதாகவும் கனடாவிற்கான இலங்கைத் துணை உயர் ஆணையர் அன்சுல் ஜான் கூறினார்.

வியாழக்கிழமை (07) அவரை சந்தித்து உரையாடியதாக கூறிய துணை உயர் ஆணையர், அவர் பெரும்   அதிர்ச்சியில் தொடர்ந்து உள்ளதாக தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு துப்புரவுப் பணியில் இருந்து தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டிற்கு வந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்னர் கொலையாளி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிறந்தநாள் விழாவை நடத்தினர் என நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 வயது Febrio De-Zoysa கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 19 வயதான Febrio De-Zoysa

அவருக்கு எதிராக 6 முதல் நிலை கொலை, ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர் இலங்கைப் பிரஜை எனவும் , அவர் ஒரு மாணவராக கனடாவில் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது.

Ottawaவில் தனது கல்வியை தொடரும் எண்ணத்தில், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் Febrio De-Zoysa இந்த இல்லத்தில் தங்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

Algonquin கல்லூரியின் பேச்சாளர், Febrio De-Zoysa அங்கு ஒரு மாணவராக இருந்ததை உறுதிப்படுத்தினார்.

ஆனாலும் Febrio De-Zoysa அண்மையில் தனது கல்வியை பாதியில் கைவிட்டதாக நண்பர்கள் மூலம் தெரியவருகிறது.

அவரது கடைசி பாடசாலை கல்வி காலம், 2023 குளிர்கால கல்வி ஆண்டாக இருந்தது என Algonquin கல்லூரி உறுதிப்படுத்துகிறது.

குற்றவாளி Febrio De-Zoysa  வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இவருக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Ontarioவின் 18ஆவது முதல்வர் Bill Davis மரணம்!

Gaya Raja

பயணிகளுக்கு வருகைக்கு முன்னதான COVID சோதனை தேவையை நீக்கும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட Ontario முடிவு

Leave a Comment