தேசியம்
செய்திகள்

கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலையில் ஆறு இலங்கையர்கள் பலி – 19 வயது இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் ஆறு இலங்கையர்கள் பலியாகினர்.

புதன்கிழமை (06) இரவு தெற்கு Ottawa புறநகர் பகுதியான Barrhavenனில் உள்ள இல்லத்தில்  ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள், குடும்பத்துடன் அறிமுகமானவர் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இவர்கள் ஆறு பேரின் சடலங்கள் புதன்கிழமை பின்னிரவு மீட்கப்பட்டன.

இவர்கள் ஆறு பேரும் இலங்கையர்கள் என  Ottawaவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியது.

இந்த குடும்பம்  அண்மையில் கனடாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் என வியாழக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவல்துறையினர் தெரிவித்தனர்

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் அடையாளங்கள் காவல்துறையினரால்  வெளியிடப்பட்டது.

35 வயதான தர்ஷனி பன்பரநாயக்க கம வல்வே தர்ஷனி திலந்திகா ஏகன்யகே – Darshani Banbaranayake Gama Walwwe Darshani Dilanthika Ekanyake.

இவர் பலியான குழந்தைகளின் தாயாவார்.

ஏழு வயது மகன் இனுகா விக்கிரமசிங்க – Inuka Wickramasinghe.

நான்கு வயது மகள் அஷ்வினி விக்கிரமசிங்க – Ashwini Wickramasinghe.

இரண்டு வயது மகள் ரினியானா விக்கிரமசிங்க – Rinyana Wickramasinghe.

இரண்டரை மாத மகள் – கெலி விக்கிரமசிங்கவும் Kelly Wickramasinghe.

மேலும், 40 வயதான ஜீ காமினி அமரகோன்  – Ge Gamini Amarakoon – என்பவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரும் அதே இல்லத்தில் வசித்து வந்தவர் எனவும் குடும்பத்திற்கு அறிமுகமானவர் எனவும் தெரியவருகிறது.

அவரும் இலங்கையில் இருந்து அண்மையில் கனடா வந்தடைந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பலியானவர்களின் கொழும்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் தந்தை – கணவர் சம்பவ இடத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அவர் தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பலியான ஆறு பேரில் ஐவர் இலங்கை பிரஜைகள் எனவும், இரண்டரை மாத குழந்தை கனடாவில் பிறந்தவர் எனவும் Ottawaவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தேசியத்திடம் உறுதிப்படுத்தியது.

இந்த உயிரிழப்புகள் காயங்களுக்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 19 வயது Febrio De-Zoysa கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 19 வயது Febrio De-Zoysa

இவருக்கு எதிராக 6 முதல் நிலை கொலை, ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன

குற்றம் சாட்டப்பட்டவர் இலங்கைப் பிரஜை எனவும் , அவர் ஒரு மாணவராக கனடாவில் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது.

குற்றவாளி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இவருக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
இந்த படுகொலை ஒரு சோகமான வன்முறைச் செயல் என Ottawa காவல்துறை தலைவர் Eric Stubbs விபரித்தார்.

பலியான இரண்டு குழந்தைகள் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவருகிறது.

இதனால் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என Ottawa காவல்துறை வியாழன் மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியது.

Related posts

5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் இந்த வாரம் கனடாவுக்கு வரும்!

Gaya Raja

Ontarioவில் அமைச்சரவை மாற்றம்!

Gaya Raja

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்த நெறிமுறை விசாரணைக்கு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment