Toronto நகரின் மையப் பகுதியில் கடந்த மாதம் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இரண்டு வெறுப்புணர்வு தாக்குதல்கள் தொடர்பாக 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதில் கைது செய்யப்பட்டவர் Toronto நகரைச் சேர்ந்த இலங்கையரான Lakshitha Arakmullage என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படத்தையும் Toronto காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (04) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (01) இவர் கைது செய்யப்பட்டார்.
August 29 அன்று Union புகையிரத நிலையத்தில் ஒரு நபரை இந்த சந்தேக நபர் காரணமின்றி அணுகி, சீக்கியர்களுக்கு எதிரான வசை சொற்களையும் இழிவான வார்த்தைகளையும் பேசியுள்ளார்.
பின்னர் கத்தியைக் காட்டி அவர் மிரட்டப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் அந்த நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
முதல் சம்பவம் நடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், Queens Quay West – Lower Spadina Avenue பகுதியில் இருவரை அணுகிய சந்தேக நபர் மீண்டும் அதே போன்ற வெறுப்பு வார்த்தைகளைக் கூறி ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஒருவரின் காலில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெறுப்புணர்வால் தூண்டப்பட்டு உடல் ரீதியான காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இந்த நபரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
