இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கனடாவும் அமெரிக்காவும் புதிய வரி விதிப்புகளை அறிவித்தன.
சனிக்கிழமை (21) நள்ளிரவு கால கெடுவுக்குள் இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தை எட்ட தவறியதை தொடர்ந்து, கனடா, அமெரிக்காசுங்க வரிகள் அமுலுக்கு வந்தது.
இரு தரப்பு வர்த்தக பிரதிநிதிகளும் ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மேலதிகமாக அவகாசம் அளிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மூன்று நாட்கள் கால நீட்டிப்பு வழங்கியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
கனடா மீதான அமெரிக்காவின் புதிய வரிவிதிப்புகள் அமுலுக்கு வருகின்றன.
50 சதவீத வரியானது, 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் வரிகளுக்கு ஈடாக, அதே அளவிலும் சுங்க வரிகளை விதிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்
ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவிற்கு முன்னதாக பிரதமர் Mark Carney அலுவலகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
அதில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நான் முடிவு செய்துள்ளேன் என கூறிய பிரதமர், கனடாவின் பேச்சுவார்த்தை குழுவினரை மீண்டும் நாடு திரும்புமாறு பணித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
“இந்த பேச்சுவார்த்தைகள் முழுவதும், இறுதி நிமிடம் வரை கனடியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் நேர்மையான முறையில் கடுமையாக உழைத்துள்ளனர்,” என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றதாகவும், பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றதாகவும் இருந்ததோடு, எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கின என பிரதமர் Mark Carney குறிப்பிட்டார்.
கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரியை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், எங்கள் தொழிலாளர்கள், வணிகங்களை பாதுகாப்பதற்காக, கனடாவும் அதே அளவுக்கு பதிலடி வரிகளை விதிக்கும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய கனடா மறுத்துவிட்டதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer குறிப்பிட்டார்.
கனடா ஒப்பந்தத்தை இறுதி செய்ய மறுத்துவிட்டதாகவும், பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட சமநிலையை சீர்குலைத்து விட்டதாகவும் Jamieson Greer வெள்ளி இரவு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
