Quebec மாகாணத்தின் Montreal தெற்கு பகுதியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பதின்மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Brossard நகரின் Quartier Dix30 பகுதியில் இந்த “வன்முறைச் சம்பவங்கள்” நிகழ்ந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
April 18 மாலை Dix30 திறந்தவெளி வணிக வளாகத்தில் இந்த மோதல் நடந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புதன்கிழமை (27) Longueuil காவல்துறையினரால் (SPAL) பகிரப்பட்ட ஒரு காணொளியில், பல பதின்வயதினர் ஒரு நபரை குறிவைத்து தாக்குவது காணப்படுகிறது.
பின்னர், மற்றொரு காணொளியில் குறைந்தது பன்னிரண்டு இளைஞர்களுக்கு இடையே ஒரு பெரும் கைகலப்பு நடப்பது காட்டப்படுகிறது.
இந்த சண்டையின் விளைவாக, 15 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“இவை தெருக் கும்பல்கள் வன்முறை அல்ல,” என கூறும் Longueuil காவல் நிலையத்தின் ஆய்வாளர், இவை பாடசாலையில் ஆரம்பித்து பாடசாலைக்கு வெளியேயும் தொடரும் இளைஞர்களுக்கு இடையிலான மோதல்கள் என விளக்கினார்.
இதில் காயமடைந்த சிறுவன் இந்த சம்பவத்தின் விளைவாக பலத்த காயமடைந்தார் எனவும், வாழ்நாள் முழுவதும் அவருக்கு தழும்புகள் இருக்கும் எனவும் காவல்துறையினர் கூறினர்.
Longueuil, Saint-Philippe-de-La Prairie, Candiac ஆகிய நகரங்களில் 12 இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை உள்ளடக்கிய ஒரு விசாரணையை தொடர்ந்து, நான்கு 15 வயது சிறுவர்கள், ஒன்பது 16 வயது சிறுவர்கள் உட்பட 13 சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
