கனடாவின் முக்கியத் துறைகளை பாதித்துள்ள வரிகளை அமெரிக்கா தளர்த்தினால், அமெரிக்க மதுபானங்கள் மீதான மாகாணத் தடை விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என பிரதமர் Mark Carney நம்பிக்கை தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை சில நிவாரணங்களை வழங்கும் வரை, கொள்கை மாற்றத்திற்கான விருப்பம் கனடியர்களிடம் இல்லை எனவும் அவர் வியாழக்கிழமை (23) கூறினார்.
கனடிய இறக்குமதிகள் மீதான வரிகளை Donald Trump முடிவுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, அமெரிக்காவின் மதுபானத் தடையை நீக்க முடியும் எனவும் Mark Carney தெரிவித்தார்.
“ஏனைய துறைகளில் ஏற்படும் முன்னேற்றத்துடன் இணைந்து, இந்த விடயத்திலும் எங்களால் மிக விரைவாக முன்னேற்றம் காண முடியும்,” என தலைநகர் Ottawa-வில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
“நாங்கள் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்பாட்டுக்கு பேச்சுவார்த்தை நடத்த முயல்கிறோம் என கூறிய Mark Carney, அதில் முன்னேற்றம் ஏற்படும் போது சில மாற்றங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதில் நாம் முன்னேற்றம் காண்போம் என்பதில் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது எனவும் கனடிய பிரதமர் கூறினார்.
அமெரிக்காவின் கடுமையான வரிகள் மாகாணங்களை பாதித்துள்ளதாகவும், அரசாங்கம் நடத்தும் கடைகளில் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனை செய்வதன் மூலம் அவர்களுக்கு எந்தவிதமான சலுகையும் வழங்கும் மனநிலையில் தாங்கள் இல்லை எனவும் Mark Carney தெரிவித்தார்.
Alberta , Saskatchewan ஆகிய மாகாணங்கள் கடந்த ஆண்டு அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனை செய்ய ஆரம்பித்தன.
ஆனால் ஏனைய மாகாணங்கள், பிராந்தியங்களில் இந்தத் தடை அமுலில் உள்ளது.
புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அமெரிக்காவின் மதுபானங்களுக்கான தடையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என Ontario முதல்வர் Doug Ford அண்மையில் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
