தேசியம்
செய்திகள்

மூன்று தமிழர்கள் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி!

மூன்று தமிழர்கள் பலியான விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் பலியாக காரணமான வாகன ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்ததால் தமிழர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது.

இந்தச் சம்பவத்தை “ஒரு பயங்கரமான தவறு” என குறிப்பிட்ட Ontario உயர்நீதிமன்ற நீதிபதி Mark Edwards குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ததை அடுத்து, நீதிமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினர்.

Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

Markham – Elson சந்திப்புக்கு அருகில் ஒரே குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூவர் மரணமடைந்தனர்.

இவர்கள் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான பதீரன் புவனேந்திரன், முன் இருக்கையில் பயணித்த 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன், பின் இருக்கையில் பயணித்த 23 வயதான நிலுஷ்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான நீதித்துறை விசாரணை Newmarket நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று இறுதித் தீர்ப்பு வெள்ளிக்கிழமை (17) வழங்கப்பட்டது.

March 2 ஆரம்பித்த இந்த வழக்கு விசாரணை March 9 முடிவடைந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட Anthony Baglieri நிரபராதி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மூவரின் மரணத்திற்கு காரணமான பார ஊர்தி ஓட்டுனரான அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்த நீதிபதி அவரை விடுதலை செய்துள்ளார்.

இவர் மீது, மரணத்தை விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாக மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்பதில் தனக்கு திருப்தி இல்லை என நீதிபதி தனது இறுதித் தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பவ தினமன்று Steeles வீதி கிழக்குக்கு வடக்கே உள்ள Markham –  Elson சந்திப்பில் Anthony Baglieri ஒரு trailer இணைக்கப்பட்ட பார ஊர்தியை (dump truck) தெற்கு நோக்கி ஓட்டிச் சென்றபோது, சிகப்பு விளக்கை மீறிச் சென்று கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு Acura வாகனத்தின் மீது மோதினார்.

York பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் அளித்த சான்றுகள், தனது குறுக்கு விசாரணையின் அடிப்படையில் வாகன ஓட்டுனரின் செயல்கள் குற்றமற்றவை எனவும், ஆனால் அதன் விளைவு துயரமானது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

இந்த விசாரணை நடுவர் குழுவுடன் (jury) ஆரம்பித்து இறுதியில் நீதிபதி மட்டுமே விசாரிக்கும் விசாரணையாக முடிந்தது.

இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை தூண்டியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து சென்றிருந்த நூற்றுக்கணக்கானோர் குறிப்பிட்ட தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில் ஒரு எதிர்ப்பு போராட்டத்தை அங்கு முன்னெடுத்தனர்.

இதில் தமிழ் சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என அங்கு கூடியிருந்தவர்கள் ஊடகங்களுடன் பேசுகையில் தெரிவித்தனர்.

Related posts

நான்கு பயங்கரவாத அமைப்புகளை புதிதாக தடைசெய்தது கனடிய அரசு

Lankathas Pathmanathan

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தலைவர்கள் நேரில் சந்திப்பு!

Gaya Raja

மின்சார வாகனங்களுக்கு கனிமங்களை உற்பத்தி செய்யும் Quebec நிறுவனத்திற்கு நிதி உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment