Toronto நகர பாடசாலை வாரியத்தில் (TDSB) உள்ள அறங்காவலர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க Ontario அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Ontario மாகாண அரசாங்கம் கல்வியில் பெரும் மாற்றங்களை திங்கட்கிழமை (13) அறிவித்தது.
மாகாண பாடசாலை நிர்வாகத்தை சீர்திருத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக, TDSB அறங்காவலர்கள் எண்ணிக்கையை ஏறக்குறைய பாதியாக குறைத்து, தேர்ந்தெடுக்கப்படாத புதிய நிர்வாகப் பதவிகளையும் அரசாங்கம் உருவாக்க உள்ளது.
“அறங்காவலரின் புதிய பொறுப்புகள் முன்பிருந்ததை விட கணிசமாகக் குறைக்கப்படும்” என இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் Paul Calandra கூறினார்.
திங்கள் பிற்பகல் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்தச் சட்ட மூலம், மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலை வாரியங்களில் நடப்பதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளை கையாளும் வழிமுறைகளில் ஒன்று என கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், Ontario பாடசாலை வாரியங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அறங்காவலர்கள் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்படும்.
TDSB உட்பட எட்டு பாடசாலை வாரியங்கள், அவற்றின் நிர்வாக சிக்கல்கள் காரணமாக முன்னர் மாகாண மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
மேலும் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
