ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கனடாவின் ஆதரவை ‘வருத்தத்துடன்’ பிரதமர் Mark Carney மீண்டும் உறுதிப்படுத்துகின்றார்.
ஈரானின் அணுசக்தி, பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கான அமெரிக்க, இஸ்ரேலிய முயற்சிகளுக்கு கனடாவின் ஆதரவை பிரதமர் செவ்வாய்க்கிழமை (03) மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலை கடந்த சனிக்கிழமை (28) ஆரம்பித்தது.
இந்த நிலையில் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிப்பதாக கடந்த வார இறுதியில் Mark Carney கூறியிருந்தார்.
வளர்ந்து வரும் மத்திய கிழக்கு மோதல் “சர்வதேச ஒழுங்கின் தோல்விக்கு மற்றொரு எடுத்துக்காட்டு” எனவும் அவுஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney கூறினார்.
இந்தத் தாக்குதல் குறித்து “எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை, இதில் பங்கேற்கும் படி எங்களிடம் கேட்கப்படவில்லை” எனவும் Mark Carney செய்தியாளர்களிடம் கூறினார்.
பொதுமக்கள் மீதும் அவர்களின் உள்கட்டமைப்பு மீதான ஈரானின் தாக்குதல்களை கனடா கண்டிப்பதாக கூறிய கனடிய பிரதமர், அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட அனைத்து தரப்பினரும் “சர்வதேச ஒழுங்கின் விதிகளை மதிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
