இலங்கைத்தீவின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசங்கம் இதுவரை $2 மில்லியனுக்கு மேல் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
Ditwah புயல் ஏற்படுத்திய வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உதவ கனடிய அரசாங்கம் இந்த நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
இலங்கைத்தீவில் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசங்கம் முதலில் $1 மில்லியன் நிதி உதவியை அறிவித்தது.
இந்த நிலையில் அவசரகால நிவாரண மனிதாபிமான உதவிக்களுக்காக $2 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியை கனடாவின் சர்வதேச மேம்பாட்டுக்கான வெளியுறவுச் செயலாளர் Randeep Sarai செவ்வாய்க்கிழமை (16) அறிவித்தார்.

கனடிய அரசின் இந்த நிதி உதவி பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது:
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு (World Food Programme – WFP) $1.4 மில்லியன்.
- மனிதாபிமான கூட்டணியின் உறுப்பினரான World Vision கனடாவிற்கு, கனடிய மனிதாபிமான உதவி நிதியத்தின் மூலம் நிவாரண பொருட்கள், அவசரகால தங்குமிடங்கள், தண்ணீர், சுகாதாரம், சுகாதார சேவைகளை வழங்குவதற்காக $350,000.
- கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசர கால பேரிடர் உதவி நிதியின் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகளுக்கு உதவ $215,000.
- அவசரகால நிவாரணத்தை வழங்குவதற்காக உள்ளூர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் மூலம் $70,000.
இந்த ஆதரவு உடனடி நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என தெரிவித்த Randeep Sarai, மேலும் மீட்பு முயற்சிகளில் உதவ கனடா தயாராக உள்ளது என கூறினார்.
நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், கனடிய அரசாங்கம் மேலும் தேவைகள் உருவாகும் போது தொடர்ந்து அவற்றை கவனத்தில் எடுக்கும் எனவும் கூறினார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்கு கனடா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
2024 முதல் 2025 வரையிலான நிதியாண்டில், கனடா இலங்கைக்கு $8.1 மில்லிய நிதியுதவியை இருதரப்பு மேம்பாட்டு உதவியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
