கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திங்கட்கிழமை (13) சந்தித்தார்.
இந்தியாவிற்கான தனது முதலாவது அதிகாரப்பூர்வ பயணத்தை அமைச்சர் அனிதா ஆனந்த் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தில் முதலில் இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கரை சந்தித்த அனிதா ஆனந்த் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் G7 மாநாட்டில் பங்கேற்க கனடா வருகை தந்த போது கனடிய பிரதமர் Mark Carney-யை சந்தித்ததை நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
இரு நாடுகளின் கூட்டாண்மைக்கு “புதிய உத்வேகத்தை அளிக்கும் முயற்சிகளை” அனிதா ஆனந்தின் இந்தப் பயணம் வலுப்படுத்தும் எனவும் இந்திய பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறிய இந்திய பிரதமர் எதிர்வரும் காலங்களில் கனடிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இருதரப்பு உறவுகள் சீராக முன்னேறி வருவதாக இந்த சந்திப்பின் பின்னர் S.ஜெய்சங்கர் கூறினார்.

இந்த சந்திப்புகளின் போது, இரு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் S.ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது, அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சீக்கிய கனடியரான Hardeep Singh Nijjar கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக 2023-ஆம் ஆண்டு முன்னாள் கனடிய பிரதமர் Justin Trudeau, குற்றம் சாட்டிய பின்னணியில் இரு நாடுகளுக்குமான உறவுகள் மோசமடைந்தன.
இந்த குற்றச்சாட்டை இந்திய மறுத்த நிலையில், இரு நாடுகளும் இடையிலான தூதரக சேவைகள் பாதிப்படைந்தன.
பின்னர் இருநாடுகளும் உயர்மட்ட இராஜதந்திரிகளை வெளியேற்றினர்.
கடந்த June மாதம், கனடாவில் நடந்த G7 உச்சி மாநாட்டின் போது நரேந்திர மோடியை அழைத்து Mark Carney சந்தித்திருந்தார்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இரு நாடுகளும் தங்கள் நாடுகளுக்கு புதிய உயர் ஸ்தானிகர்களை நியமித்தன.
September மாதம் New York நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது அனிதா ஆனந்தும் S.ஜெய்சங்கரும் சந்தித்தனர்.
இந்தியாவுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அனிதா ஆனந்த் பயணிப்பார் என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
