Toronto Pearson சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மாகாணத்தின் விசேட புலனாய்வு பிரிவு (Special Investigations Unit – SIU) முன்னெடுத்துள்ளது.
ஒரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (24) காலை 7 மணியளவில் அழைக்கப்பட்டனர் என Peel பிராந்திய காவல்துறை தலைவர் நிஷான் துரையப்பா தெரிவித்தார்.
இதில் திடீரென துப்பாக்கியை எடுத்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காவல்துறையினரால் சுடப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது மூன்று அதிகாரிகள் இருந்ததாகவும், இரண்டு அதிகாரிகள் மட்டுமே தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தியதாகவும் SIU தெரிவித்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்படாத நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அவர் தனது துப்பாக்கியை உபயோகிக்கவில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தினால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த பகுதியை சுற்றியுள்ள சாலைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.
இதனால் பரபரப்பான பயண மையத்தில் அதிகாலை குழப்பம் ஏற்பட்டது.
ஆனாலும் விமான சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து இயங்குவதை Pearson விமான நிலையம் உறுதிப்படுத்தியது.
வெள்ளிக்கிழமை (25) காலை பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனவும் அதன் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியாகும் எனவும் SIU தெரிவித்துள்ளது.
காவல்துறையினரால் சுடப்பட்ட நபர் “மன உளைச்சலில்” இருந்ததாக கூறப்படுகிறது.
