தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது?

கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதாகியுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடிய தமிழர் நாகலிங்கம் சுப்பிரமணியம், அவரது மனைவி கடந்த வருடம் February 24ம் திகதி அதிகாலைப் பொழுதில்  வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் யாழ்ப்பாணம் – அனலைதீவில் நிகழ்ந்தது.

கனடாவில், இருந்து இரண்டு மாதங்களிற்கு முன்னர் இவர்கள் அனலைதீவு சென்று வீடு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் 12 மணியளவில் உட்புகுந்த 4 பேர் அடங்கிய குழு அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் பணம், கடவுச்சீட்டு உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் புதன்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மூவர் ஏற்கனவே  கைது செய்யப்பட்ட நிலையில் பிரதான சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான பெண் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டார்.

அவரை 48 மணி நேரம் காவல்துறையினரின் தடுப்புக் காவலில் விசாரிக்க நீதவான் அனுமதியளித்தார்.

கனடிய தமிழர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் நள்ளிரவு பொழுதில் உட்புகுந்த 4 பேர் அடங்கிய குழு, வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கனடாவில் உள்ள ஐயப்பன் ஆலயம் ஒன்றின் தலைவரின் வழிநடத்தலில் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கைதான பெண் காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது கூற்றுக்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலை கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஆலயத்தின் குருசாமியும், போசகருமான நாகலிங்கம் சுப்பிரமணியம் மீதான தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.

கனடிய அரசும், இலங்கை காவல்துறையும் இணைந்து இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருடப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் வாகன விற்பனை முகவர்கள் இருவர் கைது

Lankathas Pathmanathan

1973ஆம் ஆண்டின் பின்னர் 2020இல் மிகக் குறைந்த விவாகரத்துகள் கனடாவில் பதிவு

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment