அனைத்துலகத் தமிழர் பேரவையின் (FGT) ஏற்பாட்டில் Toronto நகரில் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நேரில் பங்கேற்கவுள்ளார்.
அனைத்துலகத் தமிழர் பேரவையின் “உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2026” பிரம்மாண்டமாக Toronto நகரில் அடுத்த மாதம் நடைபெற ஏற்பாடாகிறது.
October 15 முதல் 18 வரை நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் பங்கேற்கவுள்ளார் என FGT புதன்கிழமை வெளியிட்ட ஒரு ஊடக செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியது.
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” (Classical Tamil & Tamils in the Era of Artificial Intelligence) என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டிற்கு தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், நவீன தொழில்நுட்பக் காலத்திற்கு ஏற்ப தமிழ் மொழி தன்னை தகவமைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்தியா, கனடா உள்ளிட்ட உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த முன்னணி தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பல்வேறு சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இந்த உலகளாவிய அறிவார்ந்த அரங்கில், தமிழக பாஜக மாநிலத் தலைவரின் வருகையும் பங்கேற்பும் மாநாட்டிற்கு கூடுதல் சிறப்பை சேர்க்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
