செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் தொடர்புடைய இலங்கை போர்க் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முன் நிறுத்தப்பட வேண்டும் என Brampton நகர முதல்வர் Patrick Brown கோரிக்கை விடுத்துள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, கனடாவில் நடைபெற்ற சிறப்பு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
Brampton நகரில் அமைந்துள்ள ‘தமிழ் இனப்படுகொலை நினைவகத்தில்’ இந்த நிகழ்வு நடைபெற்றது.
செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவு கூரவும் பெருமளவிலான கனடிய தமிழர்கள் அங்கு ஒன்றுகூடினர்.
அவர் அங்கு பொதுச் சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட நகர முதல்வர் Patrick Brown, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியில் நீதி கிடைக்கும் வரை, அவர்களுக்கான நீதியைத் தான் தொடர்ந்து வலியுறுத்த போவதாக உறுதியளித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் August 30 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.
