அமெரிக்காவுக்கு எதிரான பிரதமரின் பதில் நடவடிக்கைக்கான தனது முழு ஆதரவு உள்ளது என Ontario மாகாண முதல்வர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்தம் செய்த பிரதமரின் முடிவை, Ontario முதல்வர் உறுதிப்படுத்துகிறார்.
அமெரிக்காவின் புதிய சுங்க வரிகள் சனிக்கிழமை (22) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, கனடா வலுவாகப் பதிலளிக்க வேண்டும் என அவர் கூறினார்.
கனடா முன்னெப்போதையும் விட அதிக ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என Doug Ford வெள்ளிக்கிழமை (21) இரவு சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
நள்ளிரவு கெடுவிற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், Mark Carney அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளிவந்தன.
அமெரிக்கா முன்மொழிந்த இறுதி நேர மாற்றங்கள் “நியாயமற்றவை, பொருளாதார ரீதியாக பொருத்தமற்றவை” எனவும், சாத்தியமான எந்த ஒரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை குறித்து அவை கேள்விகளை எழுப்புவதாகவும் கூறி தனது முடிவை கனடிய பிரதமர் வெளியிட்டார்.
இந்த நிலையில் அமெரிக்காவுடனான சுங்கவரி மோதலை Doug Ford ஒரு “பொருளாதாரப் போர்” என சித்தரித்தார்.
கனடாவிற்கு ஒரு ஒருங்கிணைந்த தேசிய அளவிலான எதிர்வினை தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
கனடா, அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், Doug Ford சமீப நாட்களாக பெரும்பாலும் அமைதியாகவே இருந்து வந்தார்.
ஆனால், திங்கட்கிழமை (17) பிரதமருக்கு அனுப்பப்பட்டு, சனியன்று முதல்வர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட ஒரு கடிதம், Ontario மாகாணத்தின் நிலைப்பாடு குறித்த தெளிவை வழங்கியது.
கனடாவிடமிருந்து மேலும் சலுகைகளைப் பெற அமெரிக்காவைத் தூண்டக்கூடிய ஒரு மோசமான ஒப்பந்தத்தை விட, எந்த ஒப்பந்தமும் இல்லாதிருப்பதே மேல் என Doug Ford தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
