Toronto SickKids வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவர் குழந்தைகள் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
SickKids மருத்துவமனையைச் சேர்ந்த Dilan Dissanayake என்ற மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
44 வயதான இவர் குழந்தை பாலியல் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததாக Toronto காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
Toronto காவல்துறையின் இணையவழி குழந்தைகள் சுரண்டல் தடுப்பு பிரிவு (Internet Child Exploitation – ICE) January மாதத்தில் விசாரணையை ஆரம்பித்தது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. சுரண்டல் தொடர்பான உள்ளடக்கத்தை பதிவிறக்க மின்னணு சாதனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த விசாரணை ஆரம்பமானது.
February மாதம் புலனாய்வாளர்கள் SickKids மருத்துவமனையிலும், ஒரு தனியார் இல்லத்திலும் சோதனை நடவடிக்கையை செயல்படுத்தினர்.
இதன்போது பணியிட கணினி உட்படப் பல மின்னணு சாதனங்களை கைப்பற்றியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (21) Dilan Dissanayake என்பவரை கைது செய்தனர்.
இவர் SickKids மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும், தற்போது அவர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டபட்டவர் உடனடியாக பணி விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார் என SickKids வைத்தியசாலை உறுதிப்படுத்தியது
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணங்களுக்கும், மருத்துவராக அவர் மேற்கொள்ளும் பணிக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் புலனாய்வாளர்கள் இதுவரை கண்டறியவில்லை என காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக குழந்தை பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து “தீவிர மனவேதனையும் அதிர்ச்சியும்” அடைந்துள்ளதாக தெரிவித்து SickKids வைத்தியசாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணையில் நோயாளிகளுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ ஏதேனும் ஆபத்து இருப்பது குறித்து SickKids நிறுவனத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
